×

ஆசிரியர், மருத்துவமனை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் 2 வீடுகளை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பெரியநாயகி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (36). அரசு பள்ளி ஆசிரியர். கடந்த 18ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மாமனார் வீட்டுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த சங்கர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் கொள்ளை போயிருந்தது. அதேபோல் புக்குளம் சாலையில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜீஸ் சுல்லா (59), இவர் கள்ளக்குறிச்சியில் மருத்துவ உதவியாளர். இவர் கடந்த 17ம் தேதி தனது மனைவி அஸ்ரபுனிசாவுடன் புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 5 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு வீடுகளிலும் கொள்ளையடிக்கப்பட்ட 15 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும்.

The post ஆசிரியர், மருத்துவமனை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags :
× RELATED விருத்தாச்சலத்தில் வீட்டின் மேற்கூரையை உடைத்து 21 சவரன் கொள்ளை!!